Thursday, September 10, 2009

A9 வீதியால் போய் இருப்பாரோ மனுஷ்யபுத்திரன்?

இந்த வாரம் வெளிவந்திருக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் உள்ள ஒரு பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. கமலஹாசன் பாடிய, மனுஷ்யபுத்திரன் எழுதிய 'அல்லா ஜானே' என்று தொடங்கும் பாடல் வரிகள் உண்மையிலேய அருமையாக உள்ளது. எனக்கு என்ன சந்தேகம் எண்டால், இந்த பாடலை எழுதிய மனுஷ்யபுத்திரன் கிட்டடியில A9 வீதியூடாக பயணம் செய்திருப்பரோ என்பது தான்.

சரணத்தின் தொடக்கம் பிரமாதமாக உள்ளது.
"வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே?
வேட்டை முடிந்து திரும்புதல் எங்கே?"

அண்மையில் A9 வீதியூடாக யாழ்ப்பாணம் சென்ற எனது நண்பர்களின் வாயிலாக நான் அறிந்த விடயம் யாதெனில், ஓமந்தை தொடக்கம் முகமாலை வரையிலான A9 வீதியின் இரு மருங்கும் கண் கொண்டு பாக்கமுடியாதபடி இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. A9 வீதியெங்கும் வேதனையின் நிழல்கள் தான் நிழலாடுகிறது. அங்கே உள்ள வீடுகளில் எல்லாம் விம்மிடும் குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கும். தங்கள் வீட்டுக்கு போகும் பாதையை தொலைத்தவர்களே அநேகம் பேர். அரச பயங்கரவாதம் தன் வேட்டையை முடித்து விட்டது. நாங்கள்(குறிப்பாக நான்) இது பற்றி பேச அருகதை இல்லாதவர்கள். அங்கே மக்கள் அனுபவித்த, அனுபவித்து கொண்டிருக்கின்ற கொடுமைகளில் ஒரு சத விகிதமேனும் அனுபவியாதவர்கள். சும்மா வெறுமனே தொலைக்காட்சிகளில் காண்பிக்கும் வீடியோக்களை பார்த்து பெரு மூச்சு விடுவதோடு நமது அனுதாபம் முடிந்து போகின்றது என்பதே உண்மை.
எனக்கு பிடித்த அந்த கவிவரிகள் இங்கே முழுமையாக,
அல்லா ஜானே அல்லா ஜானே
கண்ணீர் அறியாக் கண்களும் உண்டோ?
மண்ணில் பெருகா குருதியும் உண்டோ?
நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்?
நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்?

வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே?
வேட்டை முடிந்து திரும்புதல் எங்கே?

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்
பேரீருள் இன்று நிலவினை திருடும்
அழிந்தவர் குரல்கள் சுவர்களில் கேட்கும்
அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்

வெல்பவர் எல்லாம் போர்களில் இங்கே
வீழ்ந்தவர்க்கெல்லாம் பெயர்களும் இல்லை
முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
முடிவோன்றும் இல்லா அழிவின் பாதை

முழுக் கவிவரிகளுமே நமக்கு பொருந்துமாற் போல் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் கூட கவிப்பேரரசு வைரமுத்துவின் பேனா உதிர்த்த வரிகளும் எங்கள் சோகத்தை செல்வதாக இருந்தது. இது பற்றி 'கிடுகு வேலியில்' ஒரு பதிவை இட்டுள்ளார். இவை தற்செயலா, இல்லை அறிந்து செய்யப்படாதா என்று தெரியவில்லை. எது எவ்வாறாயினும் எமக்காக அழ, அனுதாபப்பட சில ஜீவன்கள் இருக்கின்றது என்பது சந்தோசமளிகின்றது.

4 comments:

  1. வலிக்காமல் வாழ்வில்லை....வாழ்வின் வலிகள் இப்போ ஆங்காங்கே வரிகளாக....எம்மால் என்ன செய்யமுடியும் என்ற நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு ஏதோ செய்கிறார்கள்...உண்மையான சில உள்ளங்கள் இன்றளவிலும் உள்ளன..அதேநேரம் அவைகளை அகற்றிவிடும் சதியின் பின்னாலும் நிறையபேர்....! நானும் கேட்டேன் உணர்ந்தேன்..! நல்ல பதிவு..!!

    ReplyDelete
  2. வருகைக்கும், பின்னூடத்துக்கும் நன்றி. அது தான் நம்மூரில் சொல்லுவார்கள், 'சாமியே ஒமேண்டாலும் பூசாரி விடமாட்டார்' எண்டு. அந்த கதை தான் இங்கயும் நடக்குது. தானும் செய்ய மாட்டர்கள். செய்பவனையும் விடமாட்டர்கள்

    ReplyDelete
  3. நிறைவான பதிவு சுதர்ஷன்.அரசியலுக்குள் புகுந்திருக்கும் பாம்புகள்தான் நச்சைக் கக்கினபடி.எத்தனையோ நல்ல உள்ளங்கள் எங்களுக்காக எதையும் செய்யத் துணிந்திருக்கின்றன.நன்றி சொல்வோம்.
    கை கோர்ப்போம.

    ReplyDelete
  4. நன்றி ஹேமா அக்கா. பதிவுகளில் குறைவிருந்தாலும் சுட்டி காட்டவேண்டியது உங்களைபோன்ற வாசகர்களின் கடமை.

    ReplyDelete