Sunday, August 30, 2009

இப்பிடியும் மனிசன் சந்தேகப்படுவானோ

எனக்கொரு சந்தேகம் இருக்குது ...
நீங்கள் எல்லாம் இப்பிடி சந்தேகப் படுவீங்களோ எண்டு
எனக்கொரு சந்தேகம் இருக்குது ...
முதல்ல யார் சந்தேகத்துக்கு சந்தேகம் எண்டு
பெயர் வைச்சாங்கள் எண்டு பெரிய சந்தேகம்.....
சந்தேகத்துக்கான மூல காரணி என்னவேண்டும் சந்தேகம்
காரணம் இல்லாமல் சந்தேகப் பாடுவாங்களா எண்டு சந்தேகம்
இல்லை காரணத்தோடை தான் சந்தேகப் பாடுவாங்களா எண்டு சந்தேகம்
சந்தேகங்கள் வாறதால நன்மையா தீமையா எண்டு சந்தேகம்
நன்மை தான் கூட எண்டால் ஏன் சந்தேகப்படக்கூடாது எண்டு
நிறையப்பேர் சொல்லுறவை எண்டு சந்தேகம்
இல்லை தீமை தன் கூட எண்டு சொன்னால், அப்ப ஏன்
இப்பவும் ஆக்கள் சந்தேகப் பட்டுகொண்டிருக்கினம் எண்டு சந்தேகம்
சந்தேகத்துக்கும் சந்தோசத்துக்கும் எதாவது
தொடர்பு இருக்குதோ எண்டு சந்தேகம்
அப்பிடி தொடர்பு இருக்கும் எண்டால் அது நேர் விகித சமனோ
இல்லை நேர் மாறு விகித சமனோ எண்டு சந்தேகம்
இந்த சந்தேகம் எண்டதே இல்லாமல் இருந்திருந்தால்
உலகம் எப்பிடி இருந்திருக்கும் எண்டு சந்தேகம்
நான் இப்பிடி சந்தேகப்படுறதால நீங்கள் எல்லாம்
"இவன் ஒரு சந்தேகப் பிராணி" எண்டு சந்தேகிப்பிங்களோ
எண்டு அடி மனதில ஒரு சந்தேகம்
இப்பிடி பாக்கப் போனால் எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் இல்லை,
பல சந்தேகங்கள் உண்டு என்பதில சந்தேகமில்லை
இப்பிடி கணக்குவழக்கில்லாமல் சந்தேகப் பட்டால் எனக்கு
என்னவும் ஆகிடுமோ எண்டும் சந்தேகமா கிடக்கு
அப்பிடி என்னவும் ஆகினால் எண்ட நிலைமை என்னவாகும் எண்டு சந்தேகம்
இந்த சந்தேகங்களை எல்லாம் போக்க உங்கள் யாரவது
ஒருவரலாவது முடியுமா எண்டு சந்தேகம்
அப்பிடி ஒருவரால முடிஞ்ச தயவு செய்து
எனது சந்தேகங்களை தீர்த்து வைக்கவும்..
உங்களுக்கு எண்ட சந்தேகங்ளைப் பற்றி ஏதாவது
சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னட்டை கேளுங்கோ
ஏன் எண்டால் நான் பட்ட சந்தேகங்களை நீங்களும்
படக்கூடாது பாருங்கோ...

Friday, August 28, 2009

மதம் என்னும் மதம் ஓயட்டும்

மதம், உலகில் உள்ள சகல மக்களாலும் அறியப்பட்ட ஒரு பொதுச் சொல். மனித இனத்தின் தோற்றம் தொட்டே வழிபாடு எனும் ஒரு செயலும் இருந்து வருகின்றது என்பதை பண்டைய ஆய்வுகளின் மூலமாக அறிய முடிகின்றது. ஆதி காலத்தில் இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சிய மனிதன் அதை தன்னிலும் மேலான ஒரு சக்தியாகக் கருதி வழிபடத்தொடங்கினான். ஆக ஒரு வித பயவுணர்வின் காரணமாக தன்னை பாதுகாத்து கொள்ளும் முகமாக இயற்கைச் சக்திகளான மழை, இடி, மின்னல், நெருப்பு, காற்று ஆகியவற்றை கடவுளாக உருவகித்து வழிபட்டு வந்தான். நாகரீக வளர்ச்சிக்கு இணங்க அவனின் வழிபாட்டிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. அருவ வழிபாடு உருவ வழிபாடாக தோற்றம் பெற்றது. கடவுள்கள் தோற்றம் பெற்றனர். தங்களை காக்கும் சக்தியாக உருவகித்து அவர்களுக்கு உருவம் ஒன்றை கற்பனை செய்து வழிபடத்தொடங்கினான். இதுவே மதம் என்ற ஒன்றின் ஆரம்ப கட்டமாகும். இதுவே இந்து மதம் என்று அறியப்படுகின்றது.

இவ்வாறு தோற்றம் பெற்ற இந்து மதத்தில் காலப்போக்கில் பல பிளவுகள் ஏற்பட்டன. சைவம், வைஷ்ணவம், காணபத்தியம், கெளமாரம், செளரம், சாக்த்தம் என்று ஆறு சமயங்களாக பிளவு பட்டன. இந்த சமயங்களினிடையே பல்வேறுபட்ட பிரச்சினைகள் நடந்தமைக்கான ஆதாரங்கள் இன்றும் உள்ளன. உதாரணத்திற்கு சிவனை கடவுளாக கொண்ட சைவமும், விஷ்ணுவை கடவுளாக கொண்ட வைஷ்ணவமும் தமக்குள் மோதிக்கொண்டதாக கூறப்படும் சம்பவங்களை பழைய இதிகாசங்கள் மற்றும் புரானம்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

இது போக, இந்தப் பிரிவு போதாது என்று இந்து மதத்திலே குறைகள் உள்ளன, அவை மக்களை சரியான வழியில் வழிநடத்தவில்லை என்று கூறிக்கொண்டு பௌத்தமும், அதுவும் சரியில்லை என யூதமும், அதிலும் குறை என்று கிறீஸ்தவமும், அதுகூட முழுமை இல்லையெனக் கூறிக்கொண்டு இஸ்லாமுமாக இன்று பல்வேறுபட்ட மதங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இந்த எல்லா மதங்களினதும் குறிக்கோள் எமது சக்திக்கு அப்பாற்பட்டதாக கருதப்படும் கடவுளை அடைவதற்கான வழியை காட்டுவதே என்று சொல்லப்படுகிறது. கடவுள் என்று சொல்லுமிடத்து, எம்மால் அறியப்படமுடியாத, எமது சக்தியை மிஞ்சிய ஒரு சக்தியையே குறிக்கின்றது. அவ்வாறு எம்மிலும் விஞ்சிய ஒரு சக்தி உண்டென ஒப்புக்கொள்ளுமிடத்து, அது ஒரு கடவுளாக மட்டும் இருக்கமுடியுமே அன்றி கடவுள்கள் என பன்மையாக இருப்பது சாத்தியம் அற்றதாகின்றது. இவ்வாறன ஒரு முடிவுக்கு நாங்கள் வரும்போது, மேற்கூறியதை போன்ற பல்வேறுபட்ட மதங்களும்; சிவன், விஷ்ணு, இயேசு, அல்லா, புத்தன் என்னும் பல்வேறுபட்ட கடவுள்களும் இருப்பதாக சித்தரிக்கப்படும் விதம் பகுத்தறிவு கொண்ட எமக்கு ஒரு நம்பகமில்லத்தன்மையையே தோற்றுவிக்கின்றது.

நான் இங்கு கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா இல்லையா என்று வாதிட வரவில்லை. எம்மில் பெரும்பான்மையான மக்களால் நம்பப்படும் அந்த கடவுளின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை பற்றியே வாதிட வருகின்றேன். இன்று உலகில் நடைபெறும் கொலைகள் வன்முறைகளில் 80 சதவிகிதமான பங்கு கொலைகள் மதத்தின் பெயராலேயே நிறைவேற்றப்படுகின்றன எனது வருத்தத்திற்குரிய விடயமாகும். கிறீஸ்தவமும் இஸ்லாமும், இஸ்லாமும் இந்துவும் மூதிக்கொண்டதற்கான சாட்சிகள் நிறையவே உள்ளன. மும்பை கலவரம், குஜராத் கலவரம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அல்லாவுக்கு இருந்த கோயிலை இடித்துவிட்டு அதிலே ராமருக்கு குயில் கட்டுவதில் என்ன தர்மம் இருக்கின்றதோ தெரியவில்லை. பலஸ்தீனமும், இஸ்ரேலும் இன்றும் முட்டி மோதிக்கொள்ளும் சூட்சுமமும் இந்த மதமே என்பது அனைவரும் அறிந்த இரகசியம். இந்த மதவாதங்கள் சம்பந்தமாக பல திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன, வந்த வண்ணமும் உள்ளன.

அண்மையில் வெளிவந்தது 'ஆஸ்கார்' விருதை வென்ற "Slumdog Millionaire" என்ற படத்தில் ஒரு வசனம் வரும்.கதாநாயகனால் சொல்லப்படும் அந்த வசனம் இதுவே "If it wasn't Raaman and Allah we still have our mother". அதன் அர்த்தம் யாதெனில், ராமனும் அல்லாவும் இல்லாமல் இருந்திருந்தால் என் தாய் இன்றும் உயிரோடு இருந்திருப்பாள் என்பதேயாகும். மதத்தின் மதத்தை எவ்வளவு எளிமையாக சொல்லப்படுகின்றது. அந்த ஒரு வரி விடயம் எம்முள் ஆயிரம் கேள்விகள் எழுப்புகின்றது என்பதில் ஐயமில்லை. உலகில் உள்ள சகல ஜீவராசிகளிடமிருந்தும் வேறுபட்டு உன்னதமான நிலையில் உள்ள, சிந்திக்கும் ஆற்றல் உள்ள, பகுத்தறிவுள்ள மனிதன் இன்னும் மதம் என்னும் அறியாமையில் மூழ்கி நடாத்திக்கொண்டிருக்கும் வன்முறைகளையும் பார்க்குமிடத்து நாங்கள் வெட்கித்தலை குனியவேண்டி இருக்கின்றது. எம்மை விட அறியு குறைந்த விலங்குகளுக்கு இப்படி மதங்கள் என்ற கோட்பாடுகள் இருக்குமா என்று ஆராயுமிடத்து, அவ்வாறு இல்லையென்றே சொல்லமுடிகிறது. அதனால் தான் அவை தமக்குள் தாமே மூதிக்கொல்லாமல் இருக்கின்றனவோ என்ற ஐயம் எம்மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.

இவ்வாறு எங்களை குழப்புகின்ற சந்தேகங்களுக்கு விடை காண முற்படும்போது, நாங்கள் இந்த பூமியிலே பிறந்ததன் நோக்கம் என்ன என்று அறிய முற்படும்போது, சேவை என்ற ஒரு வார்த்தை நமக்கு தென்படுகின்றது. இதையே மறைந்த அன்னை தெரேசாவும், மறைந்த இளவரசி டயானாவும் எமக்கு சொல்லிவிட்டு சென்றார்கள். மதம் என்ற ஒரு சிறிய போர்வைக்குள் சிக்காமல், அதை விட்டு வெளியே வந்து, மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்த்து, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மனோபாவத்தை வார்ப்போம் என்று உறுதி பூணுவோம். இந்த சந்தர்ப்பத்திலே சுவாமி விவேகானந்தர் கூறிய ஒரு கூற்றை நான் மீட்டிப்பார்க்க விரும்புகின்றேன். "நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறேன், கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறே முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான்.நமது இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய இறைவன் அருள்புரிவான் என்று நம்புகிறேன்."


Thursday, August 27, 2009

தக்கைகள் அறியுமோ நீரின் ஆழத்தை????

காலையில பத்து மணிக்கு வகுப்புக்கு
லெக்சரர் (lecturer) வாறதே 10:10 இக்கு தான்
பெடியள் பெட்டையள் வந்துசேர
பத்தரைக்கு மேலயாகும்.
ஆனா 9:50 இக்கு எல்லாம்
நான் வகுப்பறையில் ஆஜர்
ஏன் எண்டு கேட்டல்,
பாவம் தனிமையில் இருக்கும்
வகுப்பறை எண்டு....

மத்தியானம் கான்டீனுக்கு போனா,
எல்லா மேசையும் சோடி, சோடியாய்
நிறைஞ்சிருக்கும்...
தட்டுக்குள்ள எட்டிப் பார்த்தால்,
கரண்டி முள்ளுக்கரண்டியால....
கோழியையும், மாட்டையும்
மறுபடி போட்டு சாகடிச்சுக்
கொண்டிருப்பாங்கள்...
எனக்கு பாக்க பாவமாயிருக்கும்!!
பாவம் செத்தும் இதுகளை சனம்
நிம்மதியாய் இருக்க
விடுகுதில்லையே எண்டு....

மாலையானாக் காணும்,
மன்ஸஸ்டாருக்கும், லிவர்பூலுக்கும்
மேட்ச் நடக்குதெண்டு
மாஞ்சு மாஞ்சு பாப்பாங்கள்....
எனக்கு பந்தைப்பாத்தால்
பரிதாபமாக இருக்கும்
எங்களை இந்த உலகம் சேர்ந்துநிண்டு
உதைக்கிறதைபோல,
அதையும் கன கனவான்கள்
போட்டு உதைக்கிறாங்கலே....

அம்மா சீரியல் பாக்கேக்க
அடம்பிடிச்சு சனல் மாத்திபபாத்த
கிரிக்கட்டை கூட பாக்க விருப்பமில்லை
சேவாக் பந்தை சிக்ஸ்சருக்கு அடிக்கேக்க
எண்ட மனம் பதைபதைக்குது,
இந்தப் பந்து மாதிரி தான் எங்களையும்
பூமிப் பந்தில இருந்து தூக்கி எறிஞ்சிடுவங்களோ எண்டு....

சரி இரவாச்சு படுப்பமேண்டு
கண் மூடித் தூங்கினாலும்
கண்றாவி இந்தக் கனவு கூட
விடுகுதில்லையே!!!!!!!!!!!!!!

உலகம் அறியுமோ எம்மன ஆவலை??
தக்கைகள் அறியுமோ நீரின் ஆழத்தை????

Wednesday, August 26, 2009

விடியும் திசை(படித்ததில் பிடித்தது )

நினைவில் மறந்த
என் ஊருக்கு
நீண்ட நாட்களின் பின்
என் பயணம்
புழுதி படிந்த பாதை
என் ஊருக்கு
வழி காட்டியது

தெருவோரம்
படுத்திருந்த நாய்
மௌனத்தால்
அமைதி காத்தது
வரும் காலம் என்னை
புது முகமாய்ப் பார்த்தது
விழுது பரப்பிய
ஆலமரம் மட்டும்
அறிமுகமாய் சலசலத்தது

அகல விரிந்த
கல்லறைகள்
நிறைந்த வெளி
என் உறவுகளின்
இருப்பிடம் அது
என்பதை உணர்த்தியது.

அறிமுகமானவர்களை
தேடினேன் எவரும் இல்லை
அறிமுகத்துக்காகத் தேடினேன்
அதற்கும் யாரும் இல்லை

என் ஊருக்குள்
தடம் பதித்த என்
காலச் சுவடுகள்
காற்றால்
அழிக்கப் பட்டுக்கெண்டிருந்தன

குருதி படிந்து என்
நிலம் மட்டும்
நிறம் மாறி இருந்தது
என்னை அடையாளம் காண
எவரும் இருக்கவில்லை

தனிமையில் என் கால்கள்
ஊருக்கு விடை கெடுத்தன
ஊர் எல்லையில் சலசலத்த
ஆலமரம் மட்டும்
என் கால்களைத்
தடுத்தது நான் வந்த
பாதை மட்டும் அமைதியாய்
உறங்கிக் கெண்டிருந்தது

விம்மிய மனம் ஊருக்கு
விடை கெடுத்தது
பயணத்தின் இடையில்
வழி மறித்தது ஒரு கை
அடையாளத்துக்காய்
முகம் நோக்கினேன்.

தழும்புகள் அடையாளம்
மறைத்தது சிரிப்பு மட்டும்
என் இளமைக் காலத்தை
நினைவூட்டியது
குரல் அடையாளம் காட்டியது
அவன் என் நன்பன்
மீண்டும் என் இளமை
எனக்குச் சொந்தமனது

வெட்ட வெளிச்சம்....

யுத்தம் என்றால் என்ன?
அதனால் வரும்
இரத்தம் என்றால் என்ன?
இழப்பது என்றால் என்ன?
அதனை பின்பு
சகிப்பது என்றால் என்ன?
வேதனை என்றால் என்ன?
அதன் உச்சக்கடமாகிய
விரக்தி என்றால் என்ன?
இலட்சியம் என்றால் என்ன?
அதனை அடையக் கொண்ட
கொள்கை என்றால் என்ன?
பொறுப்பு என்றால் என்ன?
அதை விடுத்துச் செய்யும்
துரோகம் என்றால் என்ன?
பொறுமை என்றால் என்ன?
நாம் செய்யவேண்டிய
கடமை என்றால் என்ன?
பிறப்பு என்றால் என்ன?
ஈற்றில் வரும்
இறப்பு என்றால் என்னவென

அகராதியில் உள்ள அத்தனை
சொல்லுக்கும் அர்த்தம்
அறிந்தவர்கள் எம்மக்கள்
அர்த்தத்தின் தாக்கங்களினை
அளவுகடந்தே அனுபவித்தவர்கள்
இன்றும் கூட அனுபவித்து கொண்டிருப்பவகள்
மனச்சாட்சியை தொலைத்துவிட்டு
இல்லையில்லை புதைத்துவிட்டு
மௌனமாக நிற்கும் சர்வதேசத்திற்கே
சவால் விடக் கூடிய சக்கரவர்த்திகள்!
அகிம்சை என்று வேஷம் போடும்
அண்டை நாட்டிற்கு - அதன்
அர்த்தத்தை கற்பிக்கக்கூடிய அறிவாளிகள்!!
அவர்களும் பரந்த இப்பாரினிலே
வாழவென படைக்கப்பட்ட ஜீவன்கள்தான்
காலத்தின் கோலத்தால்,
கடவுள்கள் கபடி விளையாடும்
கந்தக பூமியிலே அவதரித்து விட்டார்கள்!!!
படைப்பவனுக்கும், அழிப்பவனுக்கும்
இடையில் நடக்கும் பந்தயத்திலே
பலிக்கடாவாக்கப்பட்டு விட்டார்கள்!!!!
இடையே தன்னிருப்பை காட்டவென
காப்பவனும் களத்திலே குதித்ததன்
விளைவு?
முத்தரப்பு போட்டியாய் இன்று
விஸ்தரித்து நிற்கின்றது.
சல்பரும் காபனும்
சங்கமமான காற்று!
பொட்டாசியமும் பொஸ்பரசும்
புதைந்து போன மண்!!
நைதரசனாலும் குளோரினாலும்
நனைந்து விட்ட நீரென!!!
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள
அத்தனை மூலகங்களும்
அங்கே ஆஜராகி உள்ளன.
வேதியியல் சோதனைக் கூடமொன்று
அங்கே விரிந்து கிடக்கின்றது.
இத்தனை சோதனைக்குள்ளிருந்தும்
சாதனை படைக்கவென ஏங்கி நிற்கின்றார்கள்..
எஞ்சி நிற்கும் மூலகமான
"தோரியத்தை" கொண்டுவந்து
கொட்டினாலன்றி - இவர்கள்
வீரியத்தை அடக்க வேறொன்றும்
இல்லையென்பது வெட்ட வெளிச்சம்....