Thursday, March 27, 2014

அப்பாவும் நானும் அங்கஜனும்!

ஓவரின் இறுதித் தறுவாயில் அடுத்தடுத்து இரண்டு விக்கட்கள். "இங்கிலண்டுக்கு சான்சே இல்லை " என்ற என் கூற்றை over the phone இல் ஒரேயடியாக நிராகரிக்கிறார். நான் எழுதிய 'எதுவும் நடக்கலாம் இங்கே' வை எனக்கே மொழிபெயர்க்கின்றார். இந்த சம்பாஷனை நடந்து கொண்டிந்தபோது நேரம் ஐக்கிய இராச்சிய நேரப்படி பிற்பகல் மூன்றரை இருக்கலாம். பெரும்பாலும் என் கூற்றுக்களை அப்பா ஆமோதிப்பதில்லை என்றே சொல்லலாம். பல சமயங்களில், சந்ததி இடைவளியே இதற்கு காரணம் என்று நான் சாந்தமாகி விடுவதுண்டு. இன்று கடைசியில் என்னவோ அப்பாவின் நிராகரிப்பு நிஜமாகிப்போனது. 

என்னைப்போலவே அப்பாவுக்கும் கிரிக்கட் என்றால் அலாதிப்பிரியம் என்று எழுதினால் அவையடக்கம் அற்றதாகி விடும் என்பதால், அப்பாவைப்போலவே எனக்கும் என்று மாற்றி வாசித்துக்கொள்ளுங்கள். நன்றி! 

அது யாழ்ப்பாணத்தின் இருண்ட காலம். இதுகாரும் பெருநிலப்பரப்பில் பணிபுரிந்து கொண்டிருந்த அப்பா குடாநாட்டிற்கு மாற்றலாகி வந்த நேரம். அந்நாட்களில் வடக்கு முற்றத்தில் தென்னை மட்டையில் செய்த bat கொண்டு நானும் அவரும் ஆடியதை மறக்க இயலாது. நானாக விலகிச்செல்லும் வரை என்னை அவரால் அவுட்டாக்க முடியாது. அலாப்பல் ஆட்டம் தான், ஆனாலும் அவர் ரசிப்பார். 

அந்தநேரத்து யாழ்பாணக்கிரிக்கட் என்றால் under 19 school கிரிக்கட் தான். எனக்கோ கிரிக்கட் விவரம் தெரியாத வயது. இருந்தாலும் அவர் விடுவதாய் இல்லை. கிரிக்கட் பார்க்கவும், கம்பவாரிதியை ரசிக்கவும் பழக்கியவர் அவரே. நன்றாக ஞாபகம் இருக்கிறது; 1993 பிக் மட்சை மத்திய கல்லூரி மைதானத்தின் மணிக்கூண்டு கோபுர முனையிலிருந்து அப்பாவின் தோள்களில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்தது. அன்றே அவரை விட ஒருபடி  மேலேபோய் பாரத்ததாலோ என்னவோ இன்றும் அவரின் பார்வைக்கோணமும் என் பார்வைக்கோணமும் பலசமயங்களில் ஒன்றுவிட்ட கோணங்களாக அமைந்து விடுவதுண்டு. 

95/96 ல் இடம்பெயர்ந்த நேரங்களில் எமது பொழுதுபோக்கு உலக கிண்ண போட்டி நேர்முக வர்ணணையை கேட்பது ஒன்றே. ஆங்கில  மற்றும் சிங்கள வர்ணணை அடியேனுக்கு அலர்ஜி ஆகையால் தமிழல் மொழிபெயர்க்க வேண்டிய பணியும் அவருக்கு. அந்நேரத்தில் எனக்கும் அவருக்கும் இடையே எந்த அணி வெல்லும் என்ற ஒரு பந்தயம் வேறு. நான் 'கடா கடா' என்றால் அவர் 'உளக்குப்பால் உளக்குப்பால்' என்பார். கடைசியில் பந்தயத்தில் நான் வென்று, இன்றுவரை அந்தப் பந்தயக்காசு நிலுவையில் இருப்பது வேறு கதை. 

கவாஸ்கர், குண்டப்பா விஸ்வனாத், கபில் தேவ் தான் அவரின் ஆஸ்தான வித்வான்கள். அதிலும் GV மீது அளப்பரிய அன்பு.  "கவாஸ்கருக்கே குண்டப்பாவை பிடித்ததால் தான் தன் தங்கையையே கட்டிக்கொடுத்தார்" என்று பழைய கதை எல்லாம் சொல்லுவார்.  T20 தொடங்கிய போதும் "டெஸ்ட் மட்சுக்கு இனி மவுசில்லை" என்ற என் கூற்றை என்ன தீரக்க தரிசனத்தோடு நிராகரித்தார் என்று தெரியவில்லை. ஆனால் சொன்ன உதாரணம் கொஞ்சம் மெய்சிலிர்க்க வைத்தது. ஆதாகப்பட்டது, "ஆதி மொழி தமிழுக்கும் அழிவில்லை, அஃதே போல் ஆதியில் தோன்றிய டெஸ்டிற்கும் அழிவில்லை".  அவர் ஐஞ்சு நாள் டெஸ்டும் பார்ப்பார், தடாலடியாக ரசனயை மாற்றி IPLலும் பார்ப்பார். கேட்டால் கமலைப்போல "புதுப்புது டெக்னாலஜி வரேக்க நாமளும் அதை அடாப்ட் பண்ணிக்கணும்" என்று அட்வைஸ் பண்ணுவார். ஆனால் அதே சமயம் 'இந்தியன் தாத்தா' போல் சில கொள்கைகளையும் விட்டு நகரமாட்டார். சுடோக்கு கூட சோல்வ் பண்ணிடலாம், but ! (இந்த வாக்கியம் மட்டும் முற்றுப்பெறாமல் தொக்கியே நிற்கட்டும்)

அவர் ஆரம்பித்து வைத்த பழக்கம் தான்! ஆண்டு ஒன்பது படிக்கும் போது ஒருநாள், சென் ஜோன்ஸ்க்கும் எங்களுக்கும் ஒரு U 19 மட்ச். நடந்தது சென்ஜோன்ஸ் கிறவுண்ட்ஸ். எங்களுக்கு கார்த்திக் கப்டன், அவங்களுக்கு கௌரி. அந்த நேரம் கார்த்திக கௌரி எண்டால் சச்சின், சனத் மாதிரி. யார் சச்சின்? யார் சனத்? என்ற சர்ச்சைகள் வேண்டாம். கடைசில சச்சினும் சனத்தும் சேர்ந்து மும்பைக்காக விளையாடின மாதிரி, கார்த்திக்கும் கௌரியும் யப்னா டிஸ்ரிக்குக்காக விளையாடினவங்கள். இப்ப விசயம் அதில்ல. அந்த மட்சை பார்த்தே ஆக வேண்டும் என்று அங்கஜனுக்கும் எனக்கும் ஒரே கெடு. 

சனிக்கிழமை வரதன்ட ரியூசன் இருக்கு. கட் பண்ணினா வெளுத்து போடுவான். என்ன செய்யலாம்? மண்ட முழுக்க முழு யோசினை.
அங்கஜன் சொன்னான் "12 க்கு கிளாஸ் முடிய பறப்பம்". 
"அப்ப பின்னேரம் என்ன மாதிரி? கட் அடிப்பமா?" - இது என்னுடைய அபிலாசை. 
" இரண்டு பேரும் கட் எண்டா சிங்கன் கண்டு பிடிச்சிடுவான், நாங்க ரிங்ஸ்சோட கிளம்புவம்" அது அவன்ட சொல்லுயூசன். 

பிறகென்ன , மத்தியானம் 12க்கு ஒரு லுமாலாவும் ஒரு ஏசியனும் பறக்குது. லன்சுக்கு அடுத்த செசன். எங்கட துர்ரதிஸ்டம், கிறீஸுக்க கார்த்திக்கும் இல்லை, கௌரியுமில்லை. (இப்ப எனக்கு யார் நிண்டதெண்டு ஞாபகமும் இல்லை. 'கீழ சொல்லப்போற விசயத்தால' மிடிலாம்லங்கட்டில பட்ட அடியால மறதி ஏற்பட்டிருக்கலாம்) மட்சை பாத்திட்டு கிளாஸுக்கு நேரமாச்சு எண்டு மறுபடி உளக்கிக்கொண்டு வரேக்க குறுக்கால போன நாயொண்டு சைக்கிளுக்கு குறுக்கால பாய, நான் நல்லூர் சட்டநாதரை சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட, 
அங்கஜன் சொன்னான், " மச்சான் பொய் சொன்னதுக்கு பழி, பரவாயில்லை நீ இப்ப சாமி கும்பிட்ட படியால் அடிவிழாது பார்"

சட்டநாதற்ற புண்ணியமோ என்னவோ? கடைசில பிந்திப்போயும் எங்கள் இரண்டுபேருக்கும் அடியில இருந்து பாவ விமோச்சனம் கிடைத்த நிகழ்வானது முழு வகுப்பையும் கடுப்பில் ஆழ்த்தியதே உண்மை. 

(ஸ்டார் கிரிக்கட் அடுத்த வாரம்)

Saturday, March 22, 2014

எதுவும் சாத்தியம் இங்கே!!

வெற்றி இலக்கு 210, 45வது ஓவரின் ஆரம்பத்தில் ஓட்ட எண்ணிக்கை 5 விக்கட் இழப்புக்கு 200. வெற்றிக்குத் தேவை வெறும் பத்து ரன்களே! துடுப்பெடுத்தாடிக் கொண்டிருப்பது பொல்லக், மறுமுனையில் கல்லீஸ். ஆரைக்கேட்டாலும் கண்ண மூடிக்கொண்டு அடுத்த ஒவரோட அலுவல் முடிஞ்சிடும் எண்டு தான் சொல்லுவினம். ஏன் கிரிக்கட்டுக்கு ஒரு கொம்பிளிக்கேட்டட் விதி வரைந்த டக்வேர்த், லூயிஸ் கூட கனவிலையும் நெச்சுப்பாத்திராயினம் இப்பிடி ஒரு அசம்பாவிதம் நிகழும் என்று.

45வது ஓவர், இரண்டாவது பந்து. மலிங்க போட்ட பந்தை லாவகமாக மிட்விக்கட்டுக்கு மேலால் அனுப்பிவிட்டிந்தார் பொல்லக். விளைவு பௌன்றி. அடுத்தது டொட் போல். அடுத்தது டபுள். ஐஞ்சாவது போல்; அது தான் சௌத்அவ்ரிக்காவுக்கு எமகண்டம் தொடங்கிய சுபமுகூர்த்தம். Change of space , almost a Yorker. எங்கட லோக்கல் லாங்குவிச்சில சொன்னால் 'idea ball'. பொல்லக்கின் பொல்லு பறந்திச்சு. மலிங்கா சின்னதா கொடுப்புக்க ஒரு சிரிப்பு. அவ்வளவு தான் செலிபிறேசன். இன்னும் நாலு ரன்ஸ் அடிச்சால் வின். அங்கால கல்லீஸ் வேற நட்டமரம் மாதிரி நிக்கிறான். ஆர்ப்பாட்டம் பண்ண ஆருக்கு தான் மனசு வரும். இதுவே 'விராத் ஹோலி' எண்டால் குதிச்சு , கும்மாளம் போட்டு , அவுட்டானவனை பாத்து முறாய்ச்சு ஒரு வழி பண்ணியிருப்பான். அது வேற கதை. ஒவரின் கடைசிப் பந்து, உள்ள வந்தது அன்ரூ ஹோல். திருப்பியும் ஒரு slow ball. Front foot la போய் defence பண்ண பாத்திருப்பார் எண்டு நினைக்கிறன். கஷ்டகாலம். பந்து பட்டில பட்டு எகிறி நேர தரங்கவிடம் சரண்டரானது. 200/5 என்று ஆரம்பித்த ஓவர் 206/7 இல முடிஞ்சுது.

அடுத்த ஓவர் வாஸ். வாஸுக்கும் கல்லீஸுக்கும் வாஸ்து பிரச்சினை போல. முதல் போல்லயே சிங்கிள் எடுத்திட்டு சிங்கம் அங்கால பம்மீட்டுது. புதுசா வந்த பீட்டர்சன் பாவம் என்ன பண்ணும்?மிச்சம் ஐஞ்சு போலையும் கிஸ் பண்ணிப்போட்டு நிண்டிடும்.

46வது ஓவர், சிங்கனுக்கு முதல் போல்ல விக்கட் எடுத்தால் முதலாவது ஹட்ரிக். ஆன ஆங்கலா நிக்கிறதும் ஒரு சிங்கம். அதுவும் 86 ரன்னோட. சும்மாவே தேவையில்லாச் சோலிக்கு போகமாட்டான், இப்ப ஹட்ரிக் சான்ஸ் வேற. ரெஸ்ட் மட்ச் வழிய off stumps க்கு வெளியில பந்து வந்தா தொடவே மாட்டான். இரண்டு கையையும் bat ஓட சேர்த்து மேல தூக்கி ஒரு கும்பிடு. அவ்வளவு தான். பந்து நெஞ்சுக்கு வந்தால் back foot, stumps க்கு வந்தால் front foot. (அப்ப குஞ்சுக்கு வந்தால் என்ன செய்யிறது எண்டு குசும்புத்தனமா கேக்கப்படாது!) Jaffna Hindu la 'ரவுண்ட்ஸ்' coach பண்ணேக்க சொன்ன தியரியை அப்பிடியே அட்சரம் பிசகாமல் அப்பிளை பண்ணுவான் பாவி. ஆயிரத்து சொச்ச நிமிசம் தொடர்ந்து not out ல நிண்டு அடிச்சதாக சின்னதா ஒரு ஞாபகம். அதால மலிங்காவுக்கே பெரிசா நம்பிக்கையில்லை. இருந்தாலும் பந்து போடவேண்டியது தொழில் தர்மம். ஓடிவந்து 'டிஸ்கஸ்' எறியுமாப்போல போட்டான் ஒரு பந்து.  நல்ல லெந்தில விழுந்த பந்து. கல்லீஸ் ஏன் அதுக்கு 'கவர் ரைவ்' அடிக்க ரைபண்ணீனான் எண்டு இண்டு வரைக்கும் டவுட் எனக்கு. அங்கஜனைக்கேட்டால், "அவனுக்கு ஒண்டுக்கு போற அவசரமாயிந்திருக்கும், விடு மச்சான்" என்பான்.

"Sangakkaara making no mistakes, Malinga is creating history out here" என்று commentator உச்சஸ்தாயியில் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார். கல்லீஸ் சுத்தி முத்தி பாத்துக்கொண்டிருந்தார். பாவம் ஒருநாளும் அலாப்பல் விளையாட்டு விளையாடுறேல்ல. ஹீ இஸ் எ பக்கா ஜென்டில்மேன் , யூ நோ? கிளீன் அவுட்டுக்கு தானாகவே வெளிநடப்பு செய்திடுவார். இண்டைக்கு அண்ணருக்கு ஒரு சின்ன டவுட். மலிங்க சும்மா துள்ளிக் குதிக்க Daryl Harper விரலத் தூக்க (நடுவிரல இல்லயப்பா, சுண்டுவிரலத் தான் காட்டினவர் Harper) நடையைக் கட்டினார் 'விஸ்வாசயின் தருவ' ஐக் கல்லீஸ்.

மலிங்கவிற்கு முதல் ஹட்ரிக். மட்ச் மாறிப்போச்சு. அடுத்ததாக வந்த அப்பக்கோப்பை 'நிட்டினி'. 2006 இல SSC யில சங்காவும் மஹலவும் நிண்டு சதிராடி ரேக்கோட் பிறேக்கிங் பார்ட்னசிப் போடேக்க, லோங்கோன்ல நிண்ட 'நிட்டினிக்கு' நானும் அங்கஜனும் சேர்ந்து கடுப்பேத்த, ஆள் கடுப்பாகி "கரிப் புக்கை" எண்டு பேசினது இப்பவும் நினைவிருக்கு. (நிட்டினிக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச சிங்களச்
சொற்களில் இதுதான் அதிகப்படியான பாவனையில் உள்ளதாம்.) நிட்டினிக்கும் பட்டிங்கும் பூர்வ ஜென்ம பகை எண்டு நினைக்கிறன். மலிங்க போட்டான் ஒரு perfect Yorker, கிளைமோரில அம்பிட்ட டக்டர் மாதிரி பிரிஞ்சு கிடந்தது stumps. வந்த முதல் போல்லயே அண்ணர் டக்கவுட். நாலு ஓவர்ல்ல எல்லாம் தலைகீழாப்போச்சு. 200/5 எங்க ? 207/9 எங்க? நடக்கிற காரியமா இது?

சிறீலங்காவால தான் இப்பிடி 'மெடிக்கல் மிராக்கிள்' குடுக்க முடியும். ஒருக்கால் ஷார்ஜாவில இந்தியாவோட 299 அடிச்சிட்டு அவங்களை 54 க்குள்ள all out ஆக்கினது அந்த நேரத்தில ரெக்கோட். ( இதை விபூசண் வாசிச்சிட்டு கடுப்பாகி என்னை 'கருணா குழு' எண்டு சொன்னாலும் சொல்லுவான்.) சரி விசயத்துக்கு வருவம். அடுத்த இரண்டொரு பந்தில சோலியை முடிச்சிடுவாங்கள் எண்டு பாத்துக்கொண்டிருக்க ஒரு ரன்ன ஓடீட்டு பிச்சோட படுத்திட்டாங்கள் பாவிப்பசங்க. அடுத்த ஓவரும் லங்கவ்வெல்ட் ( படுபாவியின்ட பேர் வாய்க்க மட்டுமில்ல எழுத்துக்கயும் உள்ளடுதில்ல) பசைய வாஸ் வெறுத்திட்டான். 49வது ஓவர், பீற்றர்சன், முதல்போல் ஸ்விங் பண்ணி மிஸ். பாத்த எல்லாரும் கண்டிப்பா 'உச்சு' கொட்டியிருப்பினம். பீற்றர்சனுக்கு சிலநேரம் 'உச்சாவே' போயிருத்திருக்கும். அடுத்த போல், lower full toss எண்டு நினைவிருக்கு. பீற்றர்சன் லைட்டா தட்ட edge ஆகி ஸ்லிப்பில நிண்ட சீமான் மிஸ் பண்ண பந்து third man ஐத்தாண்ட, எல்லாம் ஓவர். அந்த கட்சை மட்டும் பிடிச்சிருந்தால் வரலாற்று மகத்துவமான வெற்றியாக இருந்திருக்கும். ஜஸ்ட்டு மிஸ்!! வெற்றி தோல்வி எல்லாம் முக்கியமல்ல. வெற்றிக்காக எடுத்த முயற்சிதான் சுவாரஸ்யம். எத்தினை காலத்துக்கு தான் 'மியாண்டாட்' லாஸ்ட் ஓவர் லாஸ்ட் போல் சிக்ஸர் அடிச்சதை சொல்லிக்கொண்டே திரியிறது.

இன்றைக்கு நடந்த T20 இல ஆரம்பத்தில சிறீலங்கா தோக்கும் போல இருந்தத  பாத்திட்டு சில 'ஆர்வ கோளாறு பேர்வழிகள்' அவசரப்பட்டு அறிக்கை விட்டிட்டினம். அன்பான அடியார்களே! அவசரம் வேண்டாம்!!! என்னதான் சொன்னாலும் இன்றுவரை T20 ranking கில சிறீலங்கா தான் முதல் இடம். இதை ஒத்துக்கொள்ள நான் கட்டாயம் சிறீலங்கன் பானா (fan) இருக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கட்டில கடைசி ஓவர்ல கூட ஜாதகம் மாறலாம். 

Friday, March 21, 2014

ஊரே அம்மணமாத் திரியேக்க கோமணம் கட்டினவன் கோமாளியாம்!!

நீண்ட நாளாக மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயம் 'யாழ்ப்பாணத்து பொருளாதார மந்தம்' மறுபடியும் உடைஞ்ச ரெக்கோட் கதைதான். வேற வழியில்லை, கீழபோகமல் மேலாட்டமாக எழுத முடியவில்லை என்பதே உண்மை. 

யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை கந்தபுராணக் கலாச்சாரம் எண்டு சொல்லி ஞானதேசிகன் சேர் படிப்பிச்சுக்கொண்டிருக்க,
"அப்பிடி எண்டா என்ன சேர், முருகனை மாதிரி நாங்களும் இரண்டை கீப்அப் பண்ணலாமா?" என அடியேன் ஆர்வ கோளாறில கேட்டுத்துலைக்க, அந்த பாடவேளை முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வேண்டியதாகிப் போனது. ஞானதேசிகன் சேர், நடந்தாலே புல்லுக்கும் பூமிக்கும் வலிக்கும் என்று நினைப்பவர். அவருடைய 'சுப்ரீம் கோர்ட்டில' அதியுச்ச ஆயுள் தண்டனையாக ' நாட்டாமை ஊர விட்டு ஒதுக்கி வைக்கிற' மாதிரி அந்த பாடவேளைக்கு வகுப்பை விட்டு ஒதுக்கி வைப்பதை தாண்டி வேறேதும் வழங்கியதில்லை. அதுவும் பிரிண்சி நகர்வலம் வெளிக்கிடுறதை கண்டால் 'பொது மன்னிப்பு' அடிப்படையில ரீ-என்ரி குடுத்திடுவார். இவரைப் போலவே அடிதடிக் கலாச்சாரத்தில நம்பிக்கையில்லாத இன்னும் ஒரு நபர் மறைந்த கணித ஆசான் அருளானந்தசிவம் சேர். அவரோட நடந்த சம்பவங்களை எழுதினால் சொல்லவந்தது சொதப்பிவிடும் என்ற பயம் எனக்கு. 

யாழ்ப்பாணத்துக்கு என்று சில பழக்கவழக்கங்கள் இருந்ததாக நினைவு. குடுத்த வாக்கை காப்பதும் அதில் ஒன்று. வாகனம் ஒண்டை விலைமதிச்சு அச்சவாரம் குடுத்திட்டால், அடுத்தவன் வந்து கூடுதலாக் கேட்டாலும் குடுக்காத வியாபாரிகளை கண்ட அனுபவம் உண்டு. குடுக்கல் வாங்கல்களில் குறைவிட்டவர்கள் மிக மிக குறைவென்றே சொல்லலாம். மீட்பு நீதி கேட்டபோது கூட, சனம் மண்ணை அள்ளி திட்டினதே தவிர, பிறகு கப்சிப்பெண்டு கேட்ட தொகையை குடுத்திட்டுத்தான் போனதுகள். 

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தில் நடக்கும் 'குடுக்கல் வாங்கல்' சம்பவங்களை கேட்டால் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தென்படுகிறது. சுயதொழில் செய்து முன்னேறும் நோக்கத்தோடை 'தாய்நாட்டுக்கு' படையெடுத்த சில மித்திரர்கள், கையைச்சுட்டுக்கொண்டு மறுபடியும் திரவியந்தேட திரைகடலோடிவிட்டனர். கைக்காசைப் போட்டு செய்த வேலைக்கான குடுப்பனவுகளே கொடுக்கப்படாத நிலையில் அடுத்த வேலையை எப்படி அணுகுவதென்ற அவர்களின் கேள்விக்கு பதில கூகிள்ளயும் தேடினேன், இல்லவே இல்லை. 

சண்டை முடிந்த பிறகு வடக்கை நோக்கி நிதி நிறுவனங்கள் நடத்திய படையெடுப்பின் விளைவு தான் பாரதூரமானதாக அடியேனின் ஊனக்கண்களுக்கு புலப்படுகிறது. என்றோ ஒர்நாள் நட்ட விதைக்கு இன்றும் அறுவடை செய்யத்தக்க விந்தையான விவசாயம். இந்த இடத்தில்தான் குரங்கு வியாபாரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

காட்டுக்கு பக்கத்தில ஒரு ஊராம். ஒருநாள் ஒரு வியாபாரி ஊருக்கு வந்து "எனக்கு குரங்குகள் வேண்டும்,  ஒரு குரங்குக்கு பத்து ரூபா தரலாம், யார் வேண்டுமானாலும் காட்டுக்கு போய் குரங்கு பிடித்து தரலாம்" என்று open request விடுத்தானாம். எல்லாச்சனமும் 'சும்மா' காசு வருகிதெண்டு குரங்கு பிடிக்க கிளம்பீட்டுதாம். கொஞ்ச நாளையில அந்த கொள்வனவாளன் விலையை பத்தில இருந்து இருபது ஆக்கினானாம். சனத்துக்கு வலுஞ்சந்தோசம். ஓசிக்காசுக்கு ஆருக்கு தான்
ஆசையில்ல? இப்பிடி கொஞ்ச நாள் போக, காட்டுக்க குரங்கு அருகி பிடிபடுற குரங்கு குறையத்தொடங்கிட்டுதாம். கொள்வனவாளனும் விடுவதாய் இல்லை, ஐஞ்சு பத்தாக் கூட்டி கடைசில தலைக்கு சுளையா நூறு ரூபா ஆக்கிப்போட்டானாம். ஆனல் சனம் பிடிக்க காட்டுக்க குரங்கில்லாம போட்டுதாம். 

கதை இப்பிடி போக ஊருக்கு ஒரு நாள் ஒரு வேற மொத்த வியாபாரி வந்தானாம். ஒரு லொறி முழுக்க குரங்கை கொண்டுவந்து "ஒண்டு ஐம்பது, ஒண்டு ஐம்பது" எண்டு கூவிக் கூவி விற்றானாம். 'புத்திசாலி' சனமும் ஐம்பதுக்கு வாங்கி நூறுக்கு வித்தால் அடுத்த பில்கேட்ஸ் தாங்கள் தான் எண்ட எண்ணத்தில அடிபட்டு குரங்கை வாங்கிச்சித்துகளாம். ஆன கடைசில அந்த கொள்வனவான் தன்னுடைய ரிக்குயமெண்டை மாத்தி, "இனி குரங்கு வேண்டாம், கரடி பிடிச்சு கொண்டாங்கோ" எண்டானாம். வாங்கின குரங்கெல்லத்தையும் விக்க வழியில்லாத அப்பாவிச்சனத்துக்கு தாங்கள் பத்துக்கும் இருபதுக்கும் வித்த குரங்கைத்தான் தங்களுக்கே ஐம்பதுக்கு விற்றதை அறிய வாய்ப்பே இருக்கவில்லை. இருந்தும் முயற்சியில் சற்றும் மனத்தளராத விக்கிரமாதித்தர்கள் மீண்டும் கரடி பிடிக்க காட்டுக்கு போனார்களாம். 
(இப்ப என்னத்துக்கு இந்த கதையை சொல்லி நேரத்தை மினைக்கடுத்திறாய் எண்டு கேக்கபடாது )

உற்பத்திக்கான கேள்வியானது, குடிசனப்பரம்பல் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றில் தங்கியிருக்கும் என சர்மா சேர் ஓ.ல் படிக்கேக்க சொன்னதாய் ஒரு ஞாபகம். சில பல அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக மக்கள் பிரதேசங்களை விட்டு வெளியேறி, சனத்தொகை நலிந்து வரும் ஒரு பிரதேசத்தில் ஒரு செயற்கையான 'பொருளாதார ஊக்கத்தை (economical boom)' ஏற்படுத்தி அதிகப்படியான முதலீட்டை ஊக்குவித்து, ஆசை காட்டி மோசம் செய்ததான நிலை தான் தற்போது உருவாகி உள்ளது. அவனவன் ஆளாளுக்கு  அம்பிட்ட வாகனத்தை 'தவணை முறை கொடுப்பனவில்' வாங்கிவிட்டு, தவணைப் பணங்கட்ட முடியாமல் தவிக்கும் நிலை.

 காணிகளின் விலை IPL ஒக்சன் மாதிரி கணக்குவழக்கில்லாமல் கூடிக்கொண்டே போனது.  கட்டங்கள் எழுந்த மானத்துக்கு எழுந்தன.  "எங்கெங்கு காணிணும் சக்தியடா" மாதிரி இங்க 'எங்கெங்கு காணிணும் கன்கிறீட் காடுகளடா!!' கொள்வனவு சக்தியை மீறிய கொள்வனவுகள் நடைபெற்றன. வங்கியில் கடன், வட்டிக்கு கடன் என ஒரு சமூகத்தை அநியாயத்துக்கு கடனாளி ஆக்கிவிட்டன ஆக்கிரமிப்புக் கம்பனிகள். 

கேட்டால், 'அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நிலையில் இவ்வாறன மந்தநிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று, உங்கள் ஐயங்கள் அனாவசியமானவை' என்று கேட்ட வாய்க்கு போட்டனர் பூட்டு. சிங்கப்பூர் வளரேக்கயும் இப்பிடித்தான் சிக்கல் பட்டது எண்டு விளக்கம் வேற. சிங்கப்பூரிண்ட strategy வேற, எங்கட வேற எண்டு எப்பிடி புரிய வைப்பேன்? எல்லாரும் என்ரப்புரோணர் (entrepreneur) ஆகவேண்ணுமா? ஆகுங்கள். ஏன் வியாபாரக் கந்தகளாகவும் கூட ஆகலாம். தப்பேயில்ல. ஆனால் risk எடுக்கேக்க கவனமா calculated risk எடுக்க வேணும் கண்டியளோ! இல்லாட்டி எல்லாம் கவிண்டு கொட்டிண்டிடும். அங்க சிலபேருக்கு வாங்கின வாகனத்துக்கு டீசல் ஊத்தவே காசில்லாத நிலையாம். மேலும்,  யாழ்ப்பாணத்தில் கொடிகட்டிப் பறந்த சில வர்த்தகர்கள் இப்ப 'ஹர்பஜன் சிங்' கணக்கா காணமல் போனதாகவும் கேள்வி. ஏன் இந்த நிலை? 

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்ந்த இன்னுமோர் காந்தப்புலக் கோடு ; பல்தேசியக் கம்பனிகள். சந்திக்குச் சந்தி கடைவைச்சிருந்த அண்ணைமார் கனபேருக்கு அது பலத்த அடி. வயல் தோட்டம் செய்தவைக்கும் வருமானமில்லை. சிறிமாவோவின் 'தன்னிறைவு' எங்க போனதெண்டே தெரியேல்ல. பொலன்னறுவயில இருந்து வாற அரிசியால, ஊர் அரிசிக்கும், மொட்டக்கறுப்பனுக்கும் மார்க்கட்டில அடிமாட்டு விலை. இப்பிடியே போன விவசாயத்தையும், வணிகத்தையும் நம்பி வாழும் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக  என்ன செய்யும்? நடுத்தெருவுக்கு தான் வரவேண்டுமா? 'கூட்டுறவே நாட்டுயர்வு' என மே தினங்களில் மட்டும் கோசமிடும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் என்னத்தை நோக்குகின்றன? இதுதான் வடக்கின் வசந்தமா? என்றேல்லாம் இன்னும் எழுத கை நீளுதுதான், ஆன அங்கயும் போய் வரவேணும் என்ற சுயநலம் அடிவயித்தில புளியக்கரைக்கிறதால இதோட நிப்பாட்டுவம். 

(வேலையில 'கொலிடே' எடுத்தால், எங்கயாச்சும் 'கொலிடே' போயிடணும். இல்லாட்டி கொழுப்பெடுத்து இப்பிடி தான் தேவையில்லாத வேலை பாக்க தோன்றும். கடைசிவரைக்கும் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமெண்டு விளங்கேல்ல எல்லோ? )
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம். 

Monday, March 3, 2014

அகலிகை ஏன் கல்லானாள்? - பால கண்டம்

உண்மைய சொன்னா, இதை எழுதேக்க கூட என்னென்த்த சேர்க்கிறது, என்னென்னத்த விடுறது எண்டு விளங்காமல் தான் தொடங்கினது. ஆனல் கிளைமாக்ஸ்சில நம்ப கம்பவாரிதியை களமிறக்கிறது எண்டு மட்டும் முடிவாயிருந்தது. அவரை வைச்சு தானே ' அகலிகை மாட்டர' அவிழ்க்க முடியும். 
பூமியதிர்வுக்கும் , வண்ணத்துப்பூச்சியின் சிறகசைவுக்கும் தொடர்பிருக்கெண்டு 'chaos'தியரி சொல்லெக்க, நான் எழுதிற கதைக்கும் கம்பவாரிதக்கும் சம்பந்தமிருக்கிறதில என்ன தப்பு இருந்திடமுடியும்?

அதுக்கிடையில வந்த ஒரு comment கீழ்க்கண்டவாறு இருக்க, 

"It is appear to betray your fiends. Is it that ?"

 எனக்கும் லைட்டா ஒரு பயம், கிறுக்கபோற விசயம் எங்க சறுக்கிடுமோ? எங்கட கிறுக்கல்ல அடுத்தவன் மானத்தை காத்தில பறக்க விட்டிட கூடாது எண்டதில மட்டும் குறியா இருந்தன்.

போன முறை எங்க விட்டது.. ஆ .. ஞாபகம் வந்திட்டு ... பாராளுமன்றத்தில என்ன ?

பாராளுமன்றத்தில கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை , ஆளுங்கட்சி ஆதரவோட 2/3 பெரும்பான்மையால தோற்கடிச்சாச்சு.ஆனா ஒரு சில கண்டிசன் அப்பிளை. அதாகப்பட்டது, 'தனி நாடாக பிரிந்து செல்லமுடியாது' மாதிரி வேற எங்கயும் போக ஏலாது, யாரை வேணுமெண்டாலும் வீட்டை கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்து படிக்கலாம். 

'யாரை வேணும்' எண்டாலும் எண்டாப்போல, எங்களோட என்ன பெட்டையளே வந்திருந்து படிக்கப் போகுது. எல்லாம் நம்மட தோஸ்துக்கள் தான்.  பிறகென்ன தனி மாநிலம் கிடைச்ச மாதிரி முன்னுக்கு இருந்த 'office room ' எங்கட கட்டுப்பாடு. முப்படை மாதிரி நாங்களும் மூண்டு பேரா சேர்ந்தம். மூண்டு பேர் சேர்ந்து ஒரு ஒரு காரியத்தை தொடங்கினாலே அது 'விளங்காம' போகும் எண்டு ஒரு சாத்திரியும் வந்து சொல்லாமல் விட்டது நல்லதாப் போச்சு.   

வஸ்து பாத்தமாதிரி வடகிழக்கு மூலையில படிக்கிற மேசையை போட்டாச்சு. ஏனெண்டா அங்க தான் பிளக் பொயிண்ட் இருக்கு. அப்ப தான் ரேடியோ போடலாம். நாங்க படிக்கிறத்துக்கு புத்தகம் முக்கியமோ இல்லையோ ரேடியோ கட்டாயம் தேவை. கேள்விப்பேப்பர் இல்லாமல் கூட கணக்கு செய்திடுவன். ஆனா ரேடியா இல்லாமல் என்ன தான் 'முக்கினாலும்' முடியாது. இளையராஜாவின் ஏதாவது ஒரு மெட்டில் 'எறியத்துக்கான' விடை நிர்ணயிக்கப்படலாம். இல்லையேல் ARR இன் இசையில் கலப்படமற்ற 'தூய' கணிதம் எனக்கு துச்சமாகலாம். காரணம் ஏன் எண்டு நரம்பியல் நிபுணர்களுக்கே புரியாத மாயாஜாலம். என் 'தலமைச்செயலகத்தின்' தனித்தன்மை.(கடைசியா A/L சோதனையில ரோடியோ கேக்கலாது எண்டு சுப்பவைசர் சொல்ல, combine maths க்கு 'A' எடுக்க குடுப்பனவு இல்லாம போனது வேற கதை)

நிஷாந்தன் ஒவ்வொருநாளும் வரேக்க அரைக்கிலோ மிக்ஸ்சர் வாங்கி கொண்டு வருவான். சோதியர் சொல்லிப் போட்டார் மிக்ஸ்சரை எடுத்து வாய்க்க போட்டுக்கொண்டால் MCQ இக்கு answer தண்ட பாட்டில வரும் எண்டு. அதால படுபாவி ஒவ்வொருநாளும் மிக்ஸ்சர் கொண்டு வருவான். அதுக்கிடையில அருண் சொல்லுவான்
 "மச்சான் வாங்கிறது தான் வங்கிறாய் 'alpha மிக்ஸ்சரை' வாங்கிட்டு வா, அதான் நல்ல இருக்கும்".

 இப்பிடியா எங்கட படிப்பு போய்க்கொண்டிருக்கும். இடையில டின்னெர் பிரேக் ,    ரீ-பிரேக் எல்லாம் வரும். சாமம் பதினொன்டரை பன்ரெண்டானால் தூரத்தில ஒரு Honda-C90 இரைஞ்சு கேக்கும். கொஞ்ச நேரத்தில கிட்ட கிட்டவா வந்து கடைசில எங்கட படலையில நிண்டிடும். நம்ம ஐங்கரதாஸ் ஒரு சின்ன ஷொர்ட்சும் ஸ்ரீ லங்கா கிரிகெட் ரீ சேட்டோடையும் நிப்பான். அவருக்கு அது தான் ஏரியா செய்யிற நேரம்.

இப்பிடி maths செய்ய பாட்டு , physics செய்ய மிக்ஸ்சர் எண்டு 'ஊக்கிகள்' இருக்க, chemistry இக்கு என்ன ஊக்கி?


chemistry எண்டதான் மகாதேவா தான் ஞாபகத்துக்கு வாறார் 

                                                  *******************************************

என்னடா ஒரே ஜவ்வாஇழுபடுது எண்டு நினைக்கிறது சரிதான். பத்து நிமிசத்தில எழுதி முடிக்க இது என்ன பனங்காய் பணியாரம் சுடற மாட்டரே? பல தசாப்தங்களின் தொகுப்பு. கொஞ்சம் முன்ன பின்ன போய் தான் வரும். ஹேராம் படத்தை 'உச்சா' போக கூட எழும்பாம ஒட்டுமொத்த படத்தையும் ஒரே மூச்சில பாத்து முடிக்கிற ஆக்கள். நாங்க எழுதினாலும் அப்பிடி தானே இருக்கும்.

கதை எழுதின உடன 'க்ளைமாஸ்' வரோணும் எண்டு எதிர் பாக்கலாமோ? இண்டைக்கு நான் எழுதிறன். நாளைக்கு ஒருத்தன் வாசிப்பான். அவன் தன்ட view ஐ comment ஆ போடுவான். அந்த view இல இருந்து யோசிக்க புது idea வரும். இடையில வேற இரண்டு பேர் வேற idea தருவினம். அதில இருந்து பாக்கேக்க வேற ஆங்கிள்ள கதை தெரியும்.  இப்பிடியே கதை டெவலப் ஆகும். ஆனா 'கதை' நான் எழுதினது. இதெல்லாம் என்ன எனக்கு பெருமையா? இல்லை டைம் பாஸ்.. (வேலைமினக்கெட்ட அம்பட்டன் பூனையை பிடிச்சி சிரைச்சானாம்.)


என்ன இவன் எப்பவும் கமல் டயலாக்கை களவாடுறானே எண்டு ஆராயப்படாது. அதான் முன்னுக்கே சொல்லிட்டனே! குடிக்கிறது தான் வெளியில வரும் எண்டு. விளங்கேல்லயா? மறுபடி ஒருக்கால் முதல் பகுதியின் இரண்டாம் பத்தியை படிக்கவும் - நன்றி! 

                                                **************************************************

மகாதேவா சேர் - என்னைப்பொருத்தவரையில , எனக்கு இரசாயனவியலின் தந்தை. ஒருக்கால் பஸ்ஸில போகேக்க ஏதோச்சைய சந்திக்கிற வாய்ப்பு. நான் எழும்பி சேருக்கு இடங்குடுக்க, 
 " வேண்டாம் நீர் உட்காரும்" எண்ட 
எனக்கு மனங்கேக்காம 
"இல்லை சேர் நீங்க இருங்கோ" எண்ட, 
இப்படியே பரஸ்பர விட்டுக்குடுப்ப பாத்திட்டு பக்கத்து சீட்டில இருந்த அக்கா
" நீங்க இரண்டு பேருமே இருங்கோ, நான் இந்த அடுத்த halt ல இறங்க போறன்" 
எண்டிட்டு எழும்பீட்டா.

சேருக்கு பக்கத்தில இருக்க பயம் எனக்கு, எதாவது chemistry ல கேட்டிடப் போறாரோ எண்டு தான். சத்தம் போடாமல் இருந்தன். 

சேர் தான் முதல்ல கதையை தொடக்கினார். 

" உம்மட ஊர் ?"

"கோப்பாய் சேர்"

"கோப்பாயில ?"

" சந்தி பஸ் halt க்கு பக்கத்தில"

"அப்பிடியேண்டா கிரிதரன் உமக்கு ?"

" சித்தப்பா "....

இப்படியே நெல்லியடியில சேர் இறங்கு வரைக்கும் கதை போச்சுது. இறங்கேக்க சொன்னார் 

"சரி  'கோப்பாய்' நான் இறங்குமிடம் வந்திட்டு. சனிக்கிழமை வகுப்பில சந்திப்பம்"

மகாதவா சேரிட்ட படிச்சாக்களுக்கு தெரியும். மனிசன் தனக்கு பிடிச்ச ஆக்களுக்கு தானே ஒரு பேர் வைச்சு கூப்பிடுவார். அப்பிடி எனக்கு வைச்ச பெயர் தான் 'கோப்பாய்'. கூடுதலா அவர் கூப்பிடுறார் எண்டால் அர்த்தம் பெடியள் 'மண்டக்காயா'  இருப்பாங்கள். நான் தான் இதில விதிவிலக்காய் இருந்திருப்பன். Chemistry க்கும் எனக்கும் அப்படி ஒரு பொருத்தம். 

பேர் வைச்சார் எண்டா வகுப்பில அப்ப்ப கூப்பிடுவார். கேள்விகள் கேப்பர். 

அந்த நேரம் 'inorganic chemistry'. போய்க்கொண்டிருந்தது. முதலாம் கூட்ட மூலகம், இரண்டாம் கூட்ட மூலகம் எண்டு விளங்கப்படுத்திக் கொண்டு போனார்.  அப்பிடியே board ல ஒரு தாக்கத்தை எழுதினார்.

                                          NaOH  +  HCl --> NaCl + H2O

எப்பிடி பிணைப்பு விடுபடுகுது, எப்பிடி ஈற்றோட்டு இலத்திரன்கள் பங்கிடபடுகுது எண்டு எல்லாம் விளங்கப்படுத்திப்போட்டு அடுத்த தாக்கத்தை எழுதினார். 

                                         Ca(OH)2  + HCl --> ? 

திரும்பி பெட்டையளிண்ட பக்கமா பாத்தார். அந்தாள் Left இல signal ல போட்டுட்டு right இல திருப்பிற ஆள். நான் அறிய சேர் ஒரு நாளும் பொம்பிளபிள்ளயளிட்ட கேக்கிறேல்ல. ( எல்லாம் அந்த 'பென்சீன்' பிரச்சனையின் விளைவோ தெரியேல்ல). தெரியும் செல் இஞ்சால தான் விழப்போகுது எண்டு. அந்தக்கிழம ராசிபலனில  எனக்கு "குருவின் பார்வை கிட்டும்" எண்டு கிடந்தது மறந்து போச்சு. இல்லாட்டி நான் பங்கருக்க பதுங்கியிருப்பன். 

" கோப்பாய் நீர் சொல்லுவது".  

சேர் கூடுதலா பன்மை முன்னிலையில தான் ஆக்களை கூப்பிடுவார். 
தலையில செல் விழுந்த கணக்கா இருந்திச்சு. 
வகுப்பு முழுக்க என்னை வேடிக்கை பாக்குது, நான் என்னவோ அருள்வாக்கு குடுக்க போறமாதிரி. 
விடை தெரியாத ரென்சன் ஒருபக்கம், நோண்டியாக போறன் எண்ட யோசனை மறுபக்கம் என புறவிசைகளின் தாக்கத்துக்கு ஈடு குடுத்துக்கொண்டு board ஐப் பாத்தன். 

பக்கெண்டு ஒரு மனக்கணக்கு..  
/ முதல் தாக்கத்தில Na, இங்க Ca. N உம் உம் தானே வித்தியாசம். இதுக்கு போய் ஏன் மண்டைய உடைப்பான்? /

"சேர்.... CaCl  + H2O" 

திருப்பியும் கேட்டார். 

"வடிவா யோசிச்சு சொல்லும்"

உந்தாள் சரியா சொன்னாலும் உப்பிடி வெருட்டி பாக்கிறவர். அதால நான் பெரிசா எடுக்கேல்ல. ஆனாலும் முன்வாங்கில இருந்த 'மண்டைக்காய்கள்" எல்லாம் என்னைத்திரும்பி பாத்தவங்கள். சில பெட்டையள் கூட பாத்தவை. அதைக்கூட நான் பொருட்படுத்தாமல் திருப்பியும் சொன்னனதையே சொன்னன்.

அங்கே என்னால் ஒரு இரசாயன புரட்சி நடந்ததை நானே அறிய வாய்ப்பு இருக்கேல்ல.

 இளகின இரும்பை கண்டால் கொல்லன் எதையோ தூக்கி தூக்கி அடிப்பானாம். அந்தமாதிரி இந்த நிலை. சேரும் என்ன விடுறதா இல்ல. 

" சரி தாக்கத்தை சமப்படுத்தும்". 

அப்பத்தான் OH க்கு கீழ 2 இருந்தது கண்ணுக்கு தெரிஞ்சுது. 

நல்லகாலம் கணக்கெண்ட படியால மண்டை கொஞ்சம் வேலைசெஞ்சு ஒருபடியாச் சொன்னன் 

                                 Ca(OH)2 + 2 HCl --> CaCl2  + 2 H2O. 

பாவம் சேர். நான் சொன்ன விடைகளை கேட்டுத்தான் 'பூலோகத்தை விட்டே போகோணும் எண்டு முடிவெடுத்தாரோ ?'எண்டு அஞ்சலிக் கூட்டத்தில நிக்கேக்க ஒருகணம் எனக்குள்ள நான் நினைச்சுப்பாத்தன். 
                                        --------------------------------
                                            

இப்பிடி வாழ்க்கை போய்க்கொண்டிருக்க ஒருநாள், முருகன் கோயில்ல திருவிழா. தேரில்லண்டு இரவு கம்பவாரிதி ஜெயராஜ் வந்திருந்தார். வாரிதியார் வாறதேண்டதால அண்டைக்கு எங்கட combine study க்கு 'day off'  . அந்தாள் ராமாயணத்தை சொல்லத் தொடங்கினால் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம். சச்சிண்ட கவர் டிரைவ் போல சும்மா ஷார்ப்பா போய்க்கொண்டிருக்கும்.  இதை எல்லாம் நான் சொல்லி நீங்க அறியவேண்டியதில்லை.  முந்தி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில ராமாயண பிரசங்கம் நடக்கேக்க அப்பா கூட்டிக்கொண்டு போறவர். அந்த நேரம் இருந்த ஒரே ஒரு  சுவாரசியமான பொழுது போக்கு இதுகள் தானே. படம் கிடம் ஒண்டும் பாக்க ஏலாது. அப்பதொட்டு அடியேன் 'வாரிதிதாசன் '. 

தலைவர் பிரசங்கத்தை தொடங்கீட்டார். இந்த கதை மாதிரி, எங்கயோ தொடக்கி ஒவ்வொண்டாச் சொல்லிக்கொண்டு அப்பிடியே ராமன் காடேகிற சீனுக்கு வந்திட்டார். அகலிகை என்ரி ஆகிற சீன். அதுக்கும் எடுத்து விட்டார் ஒரு பாட்டை.

 "கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-

உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-

பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்"


 "என் தலைவன், தசரதராமன் காட்டுக்குள்ளே போகிறான். கூடவே ஜானகியும் தம்பி இலக்குமண்ணும் போகின்றனர். காடு, மேடு, எல்லாம் கடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்திலே ராமன் இளைப்பாற எண்ணி ஒரு மரத்தடியே ஒதுங்குகிறான்.  அம்மரத்தடியே கல்லாய்க் கிடந்தவள் அய்யன் காலடி பட்டு கன்னியாக அவதரிக்கின்றாள்." 

வாரிதியார் கணீரெண்ட குரலில் சொல்லிக்கொண்டே போகிறார். எனக்கு அதில எல்லாம் இஷ்டம் இருக்கேல்ல. எப்படா கல்லாய் மாறின காரணத்தை சொல்லுவார் எண்டு இப்ப நீங்கள் ஆவலாய் வாசிக்கிற மாதிரி , அப்ப நானும் ஆவலாய் வாரிதியாரிண்ட வாயை பாத்து கொண்டிருந்தன். 

நான் ஆவலோட எதிர்பாத்துக்கொண்டிருந்த மில்லியன் டொலர் கேள்வியை கேட்டார் தலைவர். 

" அகலிகை ஏன் கல்லானவள் ?"

நல்ல மனிசன். தானே கேள்விய கேட்டிட்டு தானே பதில் சொல்லுவார். இந்த இலக்கிய வாதிகளே இப்பிடித்தான். பதில உடன விளங்கிறமாதிரி சொல்லாயினம். கொஞ்சம் பில்ட் அப் குடுப்பினம். பதில் பாட்டா வந்திச்சு  
    

"மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன் மைந்த!

மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங் கண்

ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்."

அதுக்கும் ஒரு பாட்டை எடுத்து விட்டார்.

சரி இனிவரப்போகுதையா சமாச்சாரம் எண்டு சீட்டிங் பொசிசணை எல்லாம் சேஞ்ச் பண்ணிக்கொண்டு கேட்டால் , வாரிதியார் சொன்னார் 

"  கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எண்டு கேள்விப் பட்டிருப்பீங்கள், இங்க மனிசியின்ட தொல்லை தாங்காமல் மனசைக் கல்லாக்கிக்கொண்டு மனிசியையையும் கல்லாக்கீட்டர் மகரிஷி. எண்டாலும் பாவத்துக்கு  இரங்கி  கௌதம முனிவர் ஒரு வரங்குடுத்தார். அது என்னவெண்டா, எப்ப ஒரு 'கற்பு நெறி தவறாத' ஒருவன் உன்னை மிதிக்கிறானோ அப்ப நீ மறுபடி பெண்ணாகலாம்."

அதால ராமன் ஒரு 'கற்பு நெறி தவறாதவன்' எண்டதை உலகத்துக்கு எடுத்துக்காட்டவே அவள் கல்லாய் மாறினவள்" 

எண்டு கம்பரே சொல்லாத கங்குலூசனை (conclusion)  சொல்லி படு சப்பையாய் முடிச்சிட்டார். இந்த மொக்கைய கேக்க தான் இந்த பில்டப்பா எண்டு இப்ப நீங்க கடுப்பாகிற மாதிரித்தான் அப்ப நானும் கடுப்பாகி கதாப்பிரசங்கத்தை பாதில விட்டிட்டு வீட்ட வந்திட்டன். 

திரும்பிவரேக்க எனக்குள்ள ஒருடவுட். வேறேன்னத்தில, எல்லாம் வாரிதியாரிண்ட பதில்லதான். 'என்ன இது தசாவதாரம் மாதிரி குழப்புதே? எப்பயோ பிறக்க போற ராமன் நல்லவன் எண்டதை நிரூபிக்க பாவம் ஒரு பெண்ணை கல்லாக கடவாய் என்று சபிப்பதா?'. இப்பவரைக்கும் அந்த டவுட் அப்பிடியே இருக்கு
(பெரும்பான்மையை கேட்டால் 'இதுவும் இறைவனின் திருவிளையாடலில் ஒன்று' எண்டு சொல்லி கடுப்பேத்துவினம் எண்டிட்டு எனக்குள்ளயே கேக்காம வைச்சிருக்கிறன்.)

ஆனாலும் மனசுக்க ஒரு வைராக்கியம். எப்பவாவது வாரிதியாரை கண்டால் இதை ஒருக்கா கண்டிப்பா கேட்டிட வேணும் எண்டு. 

பிறகொருநாள் வாரிதியாரை பள்ளிக்கூடத்தில நேருக்கு நேர் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. மனுசன் ஒருக்கா 'chief  guest ' ஆ வந்தவர். அவரிண்ட 'lunch arrangement' எல்லாம் அடியேனுடைய பொறுப்பில. அதால அவரோட கொஞ்சம் ஆறுதலா கதைக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த நேரம் கேட்டன், 

"ஏன் நீங்க அகலிகை கல்லாய் மாறினதுக்கு அப்பிடி ஒரு காரணம் சொன்னீங்கள்?"

மனுஷன் சிரிச்சு கொண்டே சொன்னார்,

 "'உண்மையான காரணத்தை அறிய நீர் இன்னும் வளரனும், அதுக்கு முதல்ல நல்லா சாப்பிடனும்.  வாரும் சாப்பிடுவம்"

மறுபடியும் மூக்குடைஞ்சது தான் மிச்சம். 

(யாவும் கலப்படமற்ற காலாவதியாகா கற்பனை)

உசாத்துணை : http://www.chennailibrary.com/ (கம்பராமாயண கவிதைகள்)



Saturday, March 1, 2014

அகலிகை ஏன் கல்லானாள்? - சங்க காலம்

'சிவராத்திரி - ஒரு சிறப்பு ரீவைண்ட்' எழுதேக்க எனக்கு ஒரு ஐடியாவும் இருக்கேல்ல. சும்மா எழுதுவம் எண்டு தொடங்கினது, எங்க தொடக்கி எங்க முடிக்க எண்டு தெரியாம எதோ கிறுக்கு பிடிச்சு கிறுக்கினது. அதுக்கு ஒரு நாலு 'லைக்' விழுந்தவுடன, கிறுக்கு பிடிச்ச எனக்கு தொடர்ந்து கிறுக்க பிடிச்சிருக்கு. இனி இதை வாசிச்சு கிறுக்கு பிடிக்க போகுதோ தெரியேல்ல. அப்பிடி ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அதுக்கு கம்பனி பொறுப்பில்லை. ( எதுக்கும் ஒரு safety pre caution ஐ குடுத்திட்டால் நாம safe . இல்லாடில் மனவுளைச்சல் வந்திட்டு ,அது இது எண்டு லயபிளிட்டி இன்சூரன்ஸ் claim வந்தால் நான் எங்க போய் என்ட தலையை அடகு வைக்கிறது? ( ஆர்ரா அவன் உங்க "உன்ட தலையை அடகுவைச்சால் மட்டும் என்னவோ கிடைக்கவே போகுது" எண்டு சௌண்டு விடுறது ?))


அன்பே சிவம் படத்தை பாத்து தான்  பாலாக்கு  ' நான் கடவுள்' எடுக்கிற ஐடியா வந்ததாம். அதைப்போல தான் எனக்கும், இதை எழுதிறத்துக்கு ஐடியா தந்தது சில பல ப்ளொக்ஸ். இப்ப தான் ஒண்டு ஞாபகத்துக்கு வருது.ஒருக்கா நான் டோக்கரிட்ட போகேக்க கேட்டன், " டொக்டர் எனக்கு அடிக்கடி 'ஒண்டுக்கு' வருது, ஏதும் டியாபெடீஸ் இருக்குமோ ?" எண்டு.  அந்தாள் சொன்னார், தம்பி கண்டபடி தண்ணி குடிச்சால் அது போகத்தானே வேணும். ( அந்த மனுஷன்'உண்மையான தண்ணிய' தான் சொன்னவர்). அதே தியரி தான் இங்கயும் அப்பளை ஆகுது .கண்ட படி வாசிச்சால் கொஞ்சமாவது எழுத தோன்றும் தானே. அதுக்கு நாங்களா வாயச்சம் உண்ட கிறுக்கலை வாசிக்க எண்டு கேட்டிட்டு இதோட விட்டிட்டு எழும்ப கூடாது. பழகின குற்றத்துக்காக ப்ளீஸ் ! கீழ ஸ்குரோல் பண்ணி வாசிச்சு முடியுங்க.


நாங்களும் சங்க காலத்தில வாழ்ந்த ஆட்கள் தான். சங்கம் என்ன, சங்கமருவிய காலத்திலயும் வாழ்ந்திருக்கிறம். என்னடா இவன் பினாத்திறான் எண்டு நெனைக்கப்படாது. 
அதாகப்பட்டது குடும்ப அட்டையை கொண்டு போய் லைனில நிண்டு பத்துக்கிலோ கோதம்பமா, ஐஞ்சு கிலோ அரிசி, ரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் இன்னும் பல ஐட்டங்கள் எண்டு கூப்பனுக்கு சங்கக் கடையில வாங்கின காலம் தான் எனக்கு தெரிஞ்ச 'சங்க காலம்'. அந்த நேரத்தில சங்கக் கடை மனேச்சர்மாருக்கு ஊரில செம மரியாதை. சொல்லப்போனால் அவையள் தெய்வங்கள் மாதிரி. ஏன் சேல்ஸ்மனுக்கு  மட்டும் என்ன குறைச்சலாம்? அவையும் பெரும் ஆக்கள். தெரிஞ்சவை வந்தால் கொஞ்சம் கூடப் போட்டு குடுப்பினை. தெரியாத சனங்கள், இல்லை எண்டால் வேண்டாத சனங்கள் வந்தால் துலைஞ்சுது. குடுத்த ஐஞ்சு கிலோ அரிசியை நிறுத்தால் நாலு கிலோ தேறுமோ எண்டது கேள்வி குறி? தட்டிக்கேக்க ஆருக்கு தெம்பு இருக்கு. கிடைச்சவரை லாபம் எண்டு பேசாமபோடுங்கள் அப்பாவி ஜீவன்கள். கப்பல் பருத்தித்துறைக்கு வந்தால் தான் இவைக்கு வேலை, இல்லாட்டில் சும்மா போய் ஒரு சைன போட்டிட்டு வீட்ட போடுவினை. இவை தான் சங்க கால ஹீரோக்கள்.
இந்த கொடுமை எல்லாம் இல்லாமல் போய், அன்னை நாக பூட் சிட்டி எல்லாம் யாழ்ப்பணத்தில திறக்க வெளிக்கிட்ட காலம் 'சங்கமருவிய' காலம். இந்தக்காலத்தில எல்லாருமே ஹீரோக்கள் தான். 
இப்பிடி இலக்கியத்தில வாற மாதிரி காலங்கள் இருந்தால், அதே இலக்கியத்தில வாற மாதிரி  காதலும் வீரமும் இருக்க தானே வேணும். காதலும் வீரமும் எந்தக்காலத்திலையும் தமிழரை விட்டு மட்டுமில்ல  தமிழ் படங்கள்ல  இருந்தும் அழிக்க முடியாது. லவ் சீன், பைட் சீன் இல்லாத எந்த தமிழ் படம் ஐஞ்சு நாள் தாண்டி ஓடியிருக்கு சொல்லுங்க பாப்பம்?
' ஆனையை அடக்கிய அரியாத்தை' எண்டு ஓரள் இருந்தவா சங்ககாலத்தில எண்டு பெண்ணின் வீரத்தை கதைச்சால், இப்ப 'ஆணையே அடக்கிற  பல அரிய ஆத்தைகள்' இருக்கினம்.  காதலை பத்தி சொல்ல எனக்கு தகுதி இல்லை. அதைப்பத்தி அண்ணன் 'JK ' படலையில பொழிஞ்சு தள்ளுறார். ஆர் இந்த JK எண்டு அங்கலாய்க்கிறவைக்கு ஒரு சின்ன intro.

                                             ********************
அண்ணன் ஒரு அறிவுக்கஜானா . எந்த பிச்சிலையும் அடிச்சு ஆடுவார். பௌன்ஸ் எண்டாலும் சிம்பிளா ஹூக் ஷோட்ல வெளுத்திடுவார். துஸ்ரா எண்டாலும் பொறுமையா டிபென்ஸ் பண்ணிடுவார். என்ன கார் ட்ரக் மாறி போகுது போல. இப்பிடியே போனால் JK இக்கு வாளி வைக்கிறான் எண்டு நெனைக்க போறாங்கள. So நீங்களே அவர்ட blog க்கு போய் வாசிச்சு பாத்து முடிவெடுங்கோ. 
                                             **********************

(அடே நீ என்ன தான் சொல்ல வாறாய் எண்டு உங்க கன பேர் சொல்லுறது எனக்கும் கேக்குது பாருங்கோ)

இது சங்கத்துக்கும்  சங்கம் அருவினதுக்கும் இடைப்பட்ட காலம். யாரெல்லாம் நாட்டுக்க வரக்கூடதேண்டு ஊரடங்கு போட்டிருந்திச்சினமோ அவையளே நாட்டுக்குள்ள சுதந்திரமாய் வந்து போக அனுமதிச்சிருந்த காலம். ( 'அவையள்' ஆர் எண்டு விசர்த்தனமாய் கேட்டியள் எண்டால் , இதோட இப்பிடியே ஓடி போங்கோ). அப்பத்தான் நாங்கள் A/L படிக்க வெளிக்கிட்ட நேரம். அந்த நேரத்தில maths படிக்க வெளிக்கிட்டவன் எல்லாம் Engineer. Bio படிச்சவங்கள் எல்லாம் Doctor. ஆண்டு பதினொண்டில ஒருக்கால் maths இக்கு 97 எடுத்த அசட்டு தைரியத்தில எடுத்தால் A/L ல maths தான் படிக்கிறது எண்டு வரிஞ்சு கட்டிக்கொண்டு வெளிக்கிட்டாச்சு. கிருஷ்ணன் கீதைல சொன்ன மாதிரி ' விதியது வலியது' எண்டு அப்ப விளங்கேல்ல. 

"தம்பி படிக்கிறான் இல்லை. இப்பவும் முந்தி மாதிரியே உவங்களோட திரியுறான். எங்க போறாய் எண்டு கேட்டால் 'உதில தான்' எண்டு மொட்டையா சொல்லிட்டு போறான். இவனை என்ன எண்டு நீங்க தான் கேளுங்கோ .. பாளிமேன்டில அம்மா மனு தாக்கல் செய்யிறா.

நான் நினைச்சன் இண்டைக்கு என்ட கதை சரி போல கிடக்கு எண்டு.

"O/L வரைக்கும் bat டும் ball லுமா ஊரைச்சுத்திகிட்டு இருந்த பயலுகள்,  ஸ்டார் ல கிரிகெட் டீம் தொடங்க போறாங்களாம் என்ட உடன ஓடிபோய் முன்னுக்கு நிண்ட பயளுக்கள்ள முக்கால்வாசி என்ன, முழுத்தும் நம்ம பசங்க தான். அப்பிடி திரிஞ்சவங்கள உடன எல்லாத்தையும் விட்டிட்டு A/l படிக்க வா எண்டால் எப்பிடி வருவான். அந்த பய மெள்ள மெள்ள தான் படிப்பான்."
அப்பர் இப்பிடி எனக்காக ஒரு ஸ்ட்ரோங் ஒப்ஜெச்சன் குடுப்பார் எண்டு கனவிலையும் நான் நெனைச்சு பாக்கேல்ல. இந்தாள் என்னடா என்னைய இப்பிடி நம்புது! நான் கூட என்னை இவளவு நம்பினதில்லையே எண்டு யோசிச்சு கொண்டிருக்க , 

விட்டாவோ அம்மா .." மெள்ள மெள்ள எண்டா எவ்வளவு மெள்ளவா? அதுக்க ஏப்ரல் வந்திடும்". 

அம்மா பாயிண்ட் பாயிண்ட் ஆ எடுத்து விட்டா 

அதுக்கு தானே இருக்கு, second shy, third shy.. 

அப்பத் தான் என்ட மரமண்டைக்கு விளங்கிச்சு அப்பர் என்னை 'கலாய்க்கிறார்' எண்டு.

சொன்னதும் பத்தாம  அப்பர்என்னை பாத்தார். இதுக்கு மேல அவரால வாதட ஏலாது எண்டு எனக்கும் தெரியும். ( இப்ப விளங்குதோ ஏன் நான் ' ஆனையை அடக்கின அரியாத்தைய ' இதுக்க இழுத்தனான் எண்டு)

இனி நான் தான் பதில் சொல்லோனும் .. வேற வழி இல்லை.

மெல்லாம சொன்னன், combine study பண்ணினால் தான் சரிவரும் போல கிடக்கு. எனக்கு  chemistry ஓட்டெல்ல. பெடியளோட சேர்ந்து படிச்சால் டௌட்ட கிளியர் பண்ணலாம் எண்டு. 

(அது சரி தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்கிறிங்களா? 

stay tuned )